சம்பள விஷயத்தில் பாரபட்சம்: சமந்தா ஓபன் டாக்

சென்னை: சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் அடுத்த மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சகுந்தலை, துஷ்யந்தன் காதலை மையப்படுத்தி குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதன் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள சமந்தா, சினிமாவில், பாரபட்சமான சம்பளம் கொடுக்கப்படுவது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

தீவிர உழைப்புக்கு பலன் கிடைக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர்கள் தாங்களாக முன் வந்து நல்ல சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். அதற்காகப் போராடுகிறேன். அது, அவர்களை (ஹீரோக்களை) போல எங்களுக்கும் சமமாக சம்பளம் வேண்டும் எனக் கேட்டு போராடுவது போல் அல்ல. கடின உழைப்பு மற்றும் வெற்றியின் மூலம் தயாரிப்பாளர்கள் அதைக் கொடுக்க வேண்டும். அதற்காக கெஞ்சக் கூடாது. யாசகம் கேட்பதாக இருக்கக்கூடாது. திறமையை, முடிந்த அளவுக்கு வளர்த்து கொள்ள வேண்டும்.  

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஏற்றத் தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும். உடல் நிலை பாதிக்கப்பட்டு, ஓய்வில் இருந்தபோது, எனக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படக்குழுவினரும் காத்திருந்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கடந்த 2 வருடங்கள், மனரீதியாவும் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் என்னை முழுமையாக மாற்றிக்கொண்டேன். இப்போது தெளிவாக இருக்கிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.

Related Stories: