துபாய்: சாந்தனு, ஆனந்தி நடித்துள்ள இராவணக் கோட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்றது. மதயானைக் கூட்டம் படத்தை இயக்கியவர் விக்ரம் சுகுமாறன். அவரது அடுத்த படம் இராவணக் கோட்டம். கண்ணன் ரவி தயாரித்துள்ளார். பிரபு, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். துபாயில் நடந்த இசை விழாவில் பங்கேற்று விக்ரம் சுகுமாறன் பேசியது:
இந்த படம் ஆரம்பித்த முதலே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் வறண்ட பூமியில் படமாக்கினோம். படப்பிடிப்பு நடந்த சமயம், கடும் வெயில். பலருக்கு உடல் நலம் பாதித்தது. அந்த லொகேஷன்களில் படமாக்குவதற்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையெல்லாம் தாண்டி படம் உருவாகியுள்ளது. இது கருவேலங்காடு அரசியலை பேசும் படம். 1957ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக மட்டும் கொண்டு படம் உருவாகியுள்ளது. சாந்தனு உயிரை கொடுத்து படத்திற்காக உழைத்திருக்கிறார். இதில் அவர் புதிய பரிமாணத்துக்கு மாறியுள்ளார். ஹீரோயினுக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இருப்பதால், நன்றாக நடிக்க தெரிந்த ஆனந்தியை இதில் நடிக்க வைத்திருக்கிறேன்.