அஜீத்தை அரசியலுக்கு அழைத்த இயக்குனர்; ரசிகர்கள் கோபம்

ரஜினிகாந்த அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதுடன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். அஜீத்தையும் அரசியலுக்கு வரும்படி அழைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது ரசிகர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட தகவல் தெரியவந்ததும் அதை அஜீத் அறிக்கை மூலம் கண்டித்தார்.

அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் திடீரென்று அஜீத்தை அரசியலுக்கு வரும்படி அழைத்திருக்கிறார். இதுபற்றி சுசீந்திரன் கூறும்போது,’அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம்.

வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு, உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி பேர்களில் நானும் ஒருவன்’ என தெரிவித்துள்ளார். ஆனால் இவரது அழைப்பை அஜீத் ரசிகர்கள் ரசிக்கவில்லை. மாறாக அவரை தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜீத் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிந்தும் தன்னுடைய புதிய பட விளம்பரத்துக்காக சுசீந்திரன் இதுபோல் மலிவான கருத்தை தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: