நெய் தீபம் ஏற்றுவோம்: வறுமை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க பெருமாள் வழிபாடு..!!

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில் புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விஷேசம் இருக்கிறது.

திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப்  பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

மாவிளக்கிட்டு பூஜை  செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.  பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும்,  சர்க்கரையும் கலந்த கலவையான 'நவநீதமும் படைப்பதுண்டு. 'அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே  கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு. எல்லோரும் பக்திப் பெருக்குடன்,   “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷமிட வேண்டும்.

 

புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர்.  அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று பிக்‌ஷை எடுத்து வரச் சொல்லுவர். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர்  இருப்பிடத்திலேயே 'கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

கலியுகத்தில் பெருமாள் அருளை எளிதில் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் சில.

1. ஹரிசாம சங்கீர்த்தனம் செய்தல். 2. ஏகாதசி தினத்தில் உபவாசமிருந்து நாராயணனை வழிபடல். 3. எப்பொழுதும் நாராயணனை மனதில் நிறுத்தி வழிபடல். 4. பகவத் கீதையைப் படித்து பாராயணம் செய்தல். 5. கோபி சந்தனத்தை நெற்றியில் தரித்துப் பகவத் சிந்தனையுடன் இருத்தல். 6. முடிந்தவர்கள் தினமும் சாளக்ராம பூஜை செய்தல். 7. துளசி தளத்தை சூடிக்கொண்டு பகவான் நாமாவைச் சொல்லல். 8. கங்கா நதியில் நீராடி அந்த தீர்த்தத்தை அருந்தல். 9. காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் மூன்று வேளையும் ஜபித்தல்.

Related Stories: