ஒன்பது வயதுக் குழந்தையாக அருள்கிறாள், பாலாதிரிபுரசுந்தரி. மழலை வரமருளும் மாதேவி இவள்.
ராஜராஜேஸ்வரியின் கரும்பு வில்லிலிருந்து தோன்றிய சக்தியே ராஜமாதங்கி.பக்தருக்கு சகல கலைகளும் அருளும் தேவி.
அம்பிகையின் பஞ்ச புஷ்ப பாணங்களிலிருந்து தோன்றியவள் வாராஹி. இத்தேவியைபஞ்சமி தினங்களில் வழிபட்டு நற்பலன்பெறலாம். தேவியின் பாசம் ஆயுதத்திலிருந்து தோன்றியவள் அஷ்வாரூடாதேவி. தம்பதியர் ஒற்றுமைக்கும், பிரிந்த தம்பதியர் சேர்ந்திடவும் அருள் புரிபவள்.
பராசக்தியின் அங்குசத்திலிருந்துதோன்றியவள் ஸம்பத்கரி தேவி. வற்றாத செல்வவளம் அருள்பவள். மஹாகணபதியைப் போன்றே உருக்கொண்ட தேவி, வித்யாகணபதி. தடைகள் பொடிபடச் செய்பவள்; ஐஸ்வர்யங்கள் அருள்பவள். அம்பிகையும் கிருஷ்ணனும் இணைந்த திருவடிவம் கோபாலசுந்தரி. மழலைப் பேறு கிட்ட வரமளிப்பவள். நான்கு யானைகள் சூழ தோன்றும் மகாலட்சுமி, கமலாத்மிகா எனப்படுகிறாள்.16 செல்வங்களையும் வழங்கும் தேவி இவள். கருடன்மேல் ஆரோகணித்த திருமாலின் இடது தோளில் அமர்ந்தருளும் மகாலட்சுமியின் திருவுருவை பராம்பிகை என்கிறார்கள். ஞானமும், கல்வியும் அருளி, நோய்தீர்க்கும் தாய் இவள். வில் அம்பு ஏந்தி பார்வையை புருவமத்தியில் செலுத்தி, வயிற்றில் ஐம் பீஜத்துடன், மூன்று நீலக்குதிரைகள் பூட்டிய ரதத்தில் திகம்பரியாய் திருவருள் புரிபவள் திரஸ்கரணியம்பா.எதிராளியின் மனதிலிருப்பதை நமக்கு உணர்த்தவல்லவள். ஒரு கையில் எழுதுகோல், ஒரு கையில் புத்தகத்துடன் அருளும் வாக்வாதினி தேவி, கல்வி வளம் சிறக்கச் செய்வாள். மண்டியிட்டு அமர்ந்த பைரவரின் மேல் ஆரோகணித்திருப்பவள் பத்மாவதி.தேவி மகாத்மிய பதின்மூன்று அத்தியாய பலன்களைத் தருபவள். துடுப்பால் படகை செலுத்தும் பாவனையில் அமர்ந்தவள், குருகுல்லா தேவி. சம்சாரக் கடலில் தவிப்பவர்களைக் கரையேற்றுபவள். இரு கரங்களிலும் மாதுளங்கனிகள்தாங்கிய, சித்தலக்ஷ்மியை வழிபட்டால் சிறைவாச பயத்திலிருந்து நிவாரணம் பெறலாம். வயோதிக வடிவில் அங்கங்கள் தளர்ந்து ஒற்றைக் காகம் இழுக்கும் ரதத்தில், கையில் முறத்தையும், துடைப்பத்தையும் வைத்த வண்ணம் தரிசனமளிப்பவள் தூமாவதி. எதிரிகளின் தொல்லை நீக்கவல்லவள். ஒரு கரத்தில் வீணை, மறு கரத்தில் பானபாத்திரம் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சியளிப்பவள் லகுச்யாமா. கல்வி வரம் அருள்பவள். ஒரு கரத்தில் தாமரை மலர், ஒரு கரத்தில் அமிர்தப் பொற்கிண்ணம் ஏந்தி, பொற்கலசத்தில் திருவடிகளைப் பதித்திருக்கும் தேவி, ஸிந்தூராருணவிக்ரஹாம் எனப்படும் லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முதல் த்யான ஸ்லோக தேவி சகல மங்களங்களையும் அருள்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை, வில். அம்பு, வரதம், அபயம் தாங்கி, நீல நிறம் கொண்ட மகாலக்ஷ்மி, சர்வஸாம்ராஜ்யலக்ஷ்மி எனப்படுகிறாள். சகல வளங்களையும் தருபவள். கண்ணனும், பைரவியும் சேர்ந்த திருவடிவம் கோபால பைரவி. இக பர சுகங்கள் கிட்டவும், வீண் பயம் விலக்கவும் செய்பவள். கருடனின் மேல் ஆரோகணித்து சங்கு, சக்ரம், வாள், வில், கத்தி தாங்கி சுற்றிலும் கீரிப்பிள்ளைகள் சூழ காட்சி தருபவள் நகுலீ தேவி. வாக்கு வன்மை அருள்பவள்.- பரிமளா