அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி

ஆன்மிக அமுதத் துளி-3

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி

ஆன்மிகப் புதையலில் கணக்கிலடங்கா ரகசியங்கள் உள்ளன.கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும், உள்ளதைச் சொல்லியும், சொல்லாமலும், காட்டுவதுபோல் காட்டி, பின் மறைகின்ற தன்மையுடைய மகா புருஷர்கள் இருந்து சிறப்பித்த புண்ணிய பூமி இது. இன்றும்  அவர்களின் தரிசனம் ஆங்காங்கு கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன. உணர்வோர் உணர்வாராக, சில நேரங்களில் மகாஞானிகள் சிலரை சித்து வேலைகள் காட்டுகின்ற பாமர மாயாவியாக வெகுஜனங்கள் புரிந்து கொள்ளும் வேடிக்கைகளும் நடப்பது உண்டு. ஆழ்ந்த பக்தி மார்க்கத்திலும், தொண்டு செய்தும், பரம் பொருளையும், தன்னையும் இணைத்துக்கொள்ள முயற்சி செய்தும், வீடு பேறு அடைவதுதான் மனிதனாகப் பிறந்தவர்க்கான வழி ஆகும்.

சித்தர்களின் வழி தனி வழி

சித்தர்களைப்பற்றிய  பரவலாக பல கருத்துக்கள் உண்டு. தன்னை உணர்ந்து கொண்டு உணர்ந்ததை உலகிற்கு  உணர்த்த முற்பட்டவர்கள் சித்தர்கள் என்ற ஒத்தகருத்தும் உண்டு. பரம்  பொருளின் அனுபூதி பெற்றவர்கள் சித்தர்கள் ஆவர். தானும் அதுவாகி பேரொளியாக  மாறி மரணத்தை வென்று விடுகிறார்கள். மகாகவியின் ‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா. நானும் வந்தேன் சித்தனாக’ என்ற எளிய வாக்கியம். சித்த  நிலையைப்புரிய வைக்கும், தன்னை உணர்தலே ஆன்மிகத்தின் உயர்நிலை. அந்தரங்க  ஆத்ம தரிசனமே சித்த நிலை. இந்த நிலையை சித்தர்கள் பலர் புரிய வைத்திருக்கின்றனர்.

எட்டுவித சித்திகளை செயலாக்கத்  தெரிந்தவர்கள். அணுவைப் போன்று சிறிதாகுதல், பெரிதாகுதல், காற்றுபோல  மாறுதல், பொன்னைப் போன்று மின்னுதல், வசப்படுத்துதல், அனைத்தையும் தன்  கட்டுக்குள் கொண்டு வருதல், கூடுவிட்டு கூடு பாய்தல், விரும்பியதைச் செய்தல்  போன்ற எட்டுவித குணங்களும் பெற்றிருப்பது சித்தர்களின் அதிசயத்தன்மை.  இந்த அதிசயத்தன்மையே அவர்களின் சமஸ்தானமாக கருதப்படுகின்ற சதுரகிரி  மலைக்குச்செல்வோர். பலருக்கும் சித்த தரிசன அனுபவம் கிடைத்திருக்கும்.  பதினெட்டு சித்தர்கள் என்று பொதுக்கணக்கு இருந்தாலும் எண்ணிலடங்கா  சித்தர்கள்இன்றும் வாழ்கின்றனர் என்பது நம்பிக்கை ஆகும்.

அழுகணிச் சித்தர்

நான்  ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த இருபது இல்லறைக்கட்டட நூலில் உள்ள  அழுகணிச்சித்தர் பாடல்கள் மெளனம், மோனம், அழுகை, தன்னிரக்கம், வைராக்கியம்  என ஐந்து நிலையும் இணைந்தவை ஆகும். புரிவதற்குச்சற்று போக்கு காட்டுவது போல  தெரிந்தாலும், ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ அல்லவா? அதனைப்போலவே சற்று  ஆழ்ந்த வாசிப்பிலே நமக்கும் பிடிபட்டு விடும். அப்படி பிடிபட்டதை  பகிர்வதில் மகிழ்கிறேன். இவர், அழுது கொண்டு பாடியதால் அழுகணிச்சித்தர்  என்று பெயர் வந்தது என்று எளிய கருத்து இருக்கிறது. ஆனால், உண்மை அது அல்ல.  பரம் பொருளை அறிந்து கொண்ட தன்மையாலும், அதனால் கைவரப்பெற்றபரவச  நிலையாலும், பேரான பெரும்  பிரமிப்பில் கண்களில் துளிர்க்கின்ற கண்ணீர்த்  துளிகளுடன் உருக்கமாகப்பாடியவர் அழுகணிச்சித்தர்.இப்பாடல்களை படிப்பவர்கள்  பனிக்கட்டியாக உருக ஆரம்பித்து விடுவர் என்பது திண்ணம் ஆகும்.

கண்ணம்மா எனும் போதிலே

தன்  ஆத்மாதான், இறைவன் எனும் ஆத்ம தரிசனம் கண்டதால், அந்தராத்மாவையே  “கண்ணம்மா” என்று பெயர் சொல்லி அழைக்கிறார். ஆயினும், பாடலை வாசித்தால்  கண்ணம்மா என்ற பெண்ணைப்பாடுவது போல் அல்லது கண்ணம்மாவிடம் கேள்வி  கேட்பதுபோல் தோன்றினாலும், உரக்க உருக்கமான பாவனையில் பாட ஆரம்பித்தால்  கண்ணம்மா எனும் போதிலே, அது ஆத்ம தரிசன குரலாகவே கேட்க ஆரம்பித்து விடும்.  நமது உடலில் உள்ள அளப்பரிய சக்தி ஏழு இடங்களில் சக்கரங்களாக உருவகப்  படுத்தப்பட்டுள்ளன. முறையான யோகப்பயிற்சியும் நல்ல எண்ணங்களும் ஏழு  சக்திகளையும் தூண்டி விடுகின்றன.

அந்த தூண்டல் ஒரு கட்டத்தில், பேரானந்தமாக  மாறிவிடும். அந்தப்பேரானந்தத்தைத் தன் பாடல்களில் உருக்கத்துடன்  பாடியுள்ளார். தன் அனுபவத்தை சித்தர்களின் மொழியிலே பாடுகிறார் என்றுதான்  சொல்ல வேண்டும். சித்தர்களின் மொழிநடைப் பாடல்களை மெத்த விளக்கப்புகுதல்  என்பது தீக்குள் விரலை விடுதல் போன்ற அக்னிப்பரீட்சைதான். எளிதாகப்புரிந்து  கொள்ள முயன்று மலர் (விரிவது) மலர்வதுபோல மனம் பழகிக் கொள்ளும். பின்,  ஒவ்வொருசக்தியாக மெல்ல பயணிக்க வழி உண்டு என்பது முன்னோர் கருத்து.

முத்துக்கள் முப்பத்திரெண்டு

அழுகணிச்சித்தர்  பாடல்கள் மொத்தம் 32. மூலப்பதியடியோ என முதல் பாடல் தொடங்கி வெட்டுண்ட  சக்கரத்தால் எனும் பாடலுடன் முடிகிறது. ஆன்ம நேயத்துடன் இசைக்கு ஒத்து  வரும்படி பாடல்கள் உள்ளன. பாடல்கள் அனைத்திலும் சித்தர்களின் யோக  சூட்சுமங்களை உள்ளடக்கி பஞ்ச பூதங்களாலான உடம்பு இறைவனை அடைவதற்கான  வழியைக்காட்டுகிறது. 32ல் நான்கை (1/8) எட்டில் ஒரு பாகம் ஆகவும்  கொள்ளலாம். நான்கு பாடல்களைப் பார்ப்போம்.

நிலையில்லா மனமிது

இந்த  உடல், அவரவர் கையால் தலையை மட்டும் விட்டு அளந்தால் எட்டு சாண்தான்  இருக்கும். உடம்பு எட்டு சாண். உடலில் ஒன்பது வாசல் (ஓட்டைகள்):  ஐம்புலன்கள் கண், காது, மூக்கு, வாய், உடல் அதாவது பார்த்தல், கேட்டல்,  நுகர்தல், ருசித்தல், தொடு உணர்ச்சி என ஐந்து மெய்ப்பாடுகள். தூக்கம்,  விழிப்பு என இரண்டு நிலைகள்  சொல்லலாம். ஆயினும், பரமேஸ்வரனின் ஒரு  துளியாகிய நம்மால் ஐம்புலன்கள் இடும் கட்டளைக்குப்பணிந்து ஆடுகின்றோமே,  ஆத்மாவே நெறிகாட்டும் இறைவன் இல்லாததால் என் நெஞ்சத்தில் குடியேறாததால்,  ஆத்மநேய நிலையடையாது. வாடுகிறேன் நான் என்ன செய்யட்டும் என்கிறார்.  அன்பர்களே! ஐம்புலன்கள் சொல்வதை கேட்காமல் இருந்தாலே போதும் சிற்றின்பம்  தேட மாட்டோம். சிற்றின்பம் ‘தேடா நிலை’ வரும் போது மனம் ‘தறிகெட்டு ஓடா  நிலை’ வந்து விடும். இனி பாடலைப் பார்க்கலாம்.

எண் நாணுடம்பு அடியோ ஏழிரண்டு வாயிலடி

பஞ்சாயக் காரர் ஐவர் பட்டணமும் தான் இரண்டு

அஞ்சாமல் பேசுகிறாய் ஆக்கினைக்குத்தான் பயந்து

என் கண்ணம்மா

நெஞ்சாரணில்லாமல் நிலை கடந்து வாடுரண்டி

மனதை அடக்கும் நிலைக்குப் பக்குவப்பட இறைவனே துணை நிற்க வேண்டும்.

பையூரும் பாழுரும் மெய்யூரும்

சித்தர்கள் கையாழுகின்ற ஒரு சொல்  “மையூர் தாயின் கருப்பையிலிருந்து அவளின்  உயிர்வழியே பிறந்து இந்த உலகத்தில் வாழ்கின்ற உயிர் மனித உயிர். மனிதனின் கடைசி நிலை இறப்புதான் என்றாலும், உள்ளிருக்கும் ஆத்மா பரம்பொருளை  அடைவதுதான் உச்சபட்ச நோக்கம். உடலை விட்டு ஆத்மா வீகு பேறு அடையும் உச்சபட்ச வழி அறிந்தால், பிறப்பு என்பது ஒரு பொருட்டல்லவே என்கிறார்  சித்தர். இறைவனைக்காணும் பேறு கிடைக்கப் பெற்றதால் அப்பர் சுவாமிகளின்  மனிதப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்பது வேதவாக்காகும்.

பையூரிலே இருந்து பாழுரிலே பிறந்துமெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால் என் கண்ணம்மாபையூரும் மெய்யூரும் பாழாய் முடியாதோ.

முதலில் பார்த்த பாடலில் மனம் அடங்க வழி இந்தப்பாடலில் பேரின்ப வீட்டை அடைய வேண்டிய வைராக்கிய நிலைக்கான முயற்சி சொல்லப்படுகிறது.

ஐந்தெழுத்து அம்பாகும் மனம்  அடங்கி வைராக்கிய நிலை வந்தாயிற்று. இனி அடுத்தது என்ன செய்ய வேண்டும்?  அழுகணியாரே விளக்குகிறார். உங்கள் அந்தராத்மாவாகிய உள்முகத்தை வில்லாக்கி  பஞ்சாட்சர மந்திரமாகிய நமசிவாயத்தை அம்பாக்குங்கள். ஏகாந்த நிலையில்,  உச்சாடனம் செய்கின்ற அந்த ஐந்தெழுத்து மந்திரத்தேரில் ஏறி அமர்ந்து  விடுங்கள். உங்கள் மூச்சுக்காற்றை இடது நாசி, வலது நாசியில் அதாவது  சந்திர-சூரிய என்று சொல்லக்கூடிய இடகலை, பிங்களை நாடிகள் போக்கை  கவனியுங்கள். மந்திரத்தில் கட்டுண்ட மனம் உள்முகமாக பயணிக்கும் பின்னர்  அந்தராத்மா பேரின்பத்தில் தினைக்கும் அந்த நாள் எந்நாளோ “கண்ணம்மா” என்று  தனது

உள்முகப்பயணித்திற்கான ஆத்மாவையே கேள்வி கேட்டுக் கொள்ளுகிறார்.

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி

மந்திரத்தேர் ஏறியல்லோ மான்வேட்டை ஆடுவதற்குச்

சந்திரரும் சூரியரும் தான் போந்த

காவனத்தே

என் கண்ணம்மா

வந்து விளையாடியல்லோ மனமகிழ்ந்து பார்ப்பது என்றோ!

இதனையே திருமூலரும், பிராணாயாமத்தை இப்படிப் பாடுகின்றார்.

ஆரியன் நல்ல குதிரை இரண்டு உண்டு

வீசிப் பிடிக்கும் விரகறிவாரில்லை

கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படும் தானே!

எளிதாகச்சொல்ல  வேண்டும் எனில் சும்மா உட்கார்ந்து உங்கள் மூச்சுக்காற்றை கவனியுங்கள்.  முதலில் 3 நிமிடத்தில் ஆரம்பித்து நிமிடங்களை அதிகப்படுத்தினால் இரண்டு  நாடிகளும் வசப்படும். சிவபெருமானின் அருள் கூடி வர, இவை எல்லாம் கூடி  வரும்.

பாசிபடர்ந்த நீர் மாறுமா?

பற்றற்று நீரதிலே பாசிபடர்ந்தது போல்

உற்று உற்றுப்பார்த்தாலும் உன் மயக்கம்

தீர்ந்தக்கால்என் கண்ணம்மா

பற்றற்று நீராகும் பாசியது வேறாமோ?

பலவகையிலும் பொருள்

கொள்கை கூடிய பாடல்

1) தெளிவான நீரிலே ஆகாயத்தைக்

காணலாம். உன்னிப்பாக கவனித்து மனதை தெளிவுபடுத்த வேண்டும்.

2)  வாழ்க்கையின் மீது அல்லது இந்த உலக ஆசைகளில் பற்று அற்ற ஆன்மாவை தொடர்ந்து  ஐந்தெழுத்து மந்திரத்தால் உசுப்ப வேண்டும். அப்பொழுதுதான் முழுமையாக  இறைவனிடம் சேர்ந்திட பயணப்படும். என் ஆன்மாவாகிய கண்ணம்மாவே நான் சொல்வதை  கேட்டிடு என்று பாடுகிறார். மூச்சைக் கவனியுங்கள்! பேச்சைக் குறையுங்கள்!!  மந்திரத்தைச் சொல்லுங்கள்!

ஆக, அழியக்கூடிய ஆசைகளால் அழியும் உடலை  தூய்மையாக்க ஐந்தெழுத்து மந்திரமும், மந்திரத்தை உச்சரிக்கும் போது  ஏற்படும் அதிர்வலைகளும், ஆன்மாவை பரிசுத்தம் ஆக்கி ஏகம் இருக்கும். பரம்  பொருளிடம் சேர்த்து விடும். முழுமையாக இறையருள் பெறுவோம். பேரின்பம்  அடைந்திடுவோம்.

(தொடரும்)

மகேஸ்வரி சற்குரு

Related Stories: