இந்தியாவின் முதல் தொல்லியல் அகழ்வாராய்ச்சி ஆவணப்படம்: ஹிப்ஹாப் தமிழா ஆதி தகவல்

சென்னை: தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து, ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை கடந்த 2019ல் ஹிப்ஹாப் தமிழா ஆதி வெளியிட்டிருந்தார். தற்போது இந்திய தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ‘பொருநை’ என்ற தமிழ் ஆவணப்படத்தை அவர் தயாரித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உலக வரலாற்றையே மாற்றி எழுதக்கூடிய விஷயம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. முதன்முதலாக இரும்பு நாகரீகம் தொடங்கியது, (தற்போதைய துருக்கி) அனத்தோலியாவில் இருந்து என்று சொல்வது பொது வரலாறு. இதுவரை இப்படித்தான் உலகம் அதுபற்றி சொல்லி வந்திருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட்டது என்று, தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதை எந்த அடிப்படையில் அறிவித்தனர், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு என்னென்ன என்பது குறித்து, ‘பொருநை’ என்ற ஆவணப்படத்தில் விரிவாக சொல்லியிருக்கிறோம். இந்தியாவில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பற்றிய முதல் ஆவணப்படம் இது என்று சொல்லலாம். இந்த ஆண்டில் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, அடுத்த வருடம் திரையிடுவோம். உலகம் முழுவதும் நடக்கும் திரைப்பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்புவோம். பிறகு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரையிட உரிய அனுமதி பெறுவோம்.

Related Stories: