மனிதன் இந்த நிலவுலகத்தில் வாழ்கிறான். இந்த நிலவுலகத்தில் மட்டுமே வாழ்கிறான். ஆம். இன்றைய தேதி வரை வேறு அண்டங்களில் மனித உயிர்கள் இருப்பதாகத் தகவல் இல்லை. மனிதன் வாழ்வதற்கு உரிய அத்தனை வசதிகளும் இங்கே இயற்கையாக அமைத்துத் தரப்பட்டுள்ளன. உண்ண உணவு, இருக்க இடம், சுவாசிக்க காற்று, குடிக்க தண்ணீர், இத்தனையும் இயற்கை தந்த கொடை. இயற்கையை நம்பித்தான் மனிதன் இருக்கிறான்; மனிதனை நம்பி இயற்கை இல்லை என்பது இங்கே அடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டிய ஆணித்தரமான செய்தி. விவசாயம் வெற்றி பெறுவதற்கு உள்ள அடிநாதமான விஷயம் இது. இயற்கையை கவனிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது வானவியலையும், வானவியலை அடிப்படையாகக் கொண்ட ஒளி காட்டும் ஜோதிட சாஸ்திரமும் வந்துவிடுகிறது.
பயிர்கள் வளர்வதற்கு சூரிய ஒளி அவசியம். மழைக்கும் சூரிய ஒளி அவசியம். அது விழுவதற்கு மண் அவசியம். அதனால் தான் ஒரு பழைய பாட்டின் முதல் இரண்டு வரி இப்படி இருக்கிறது.
“மண்ணை நம்பி மரம் இருக்கு மழையை நம்பி பயிர் இருக்கு” மழை என்பது சூரியக் கதிர்களை நம்பித்தான் இருக்கிறது. அது மட்டும் இல்லை. சூரியன் உதிப்பதும் மறைவதும் ஒரு விவசாயியின் தினசரி வாழ்க்கைத் துவக்கத்தையும் நிறைவையும் காட்டுகிறது. சூரியன் உதிப்பதற்கு முன் நிலத்திற்குப் புறப்படுகிறான். சூரியன் அஸ்தமிக்கும் போது நிலத்திலிருந்து திரும்புகின்றான். எனவே, விவசாய வேலையின் கால அளவையும் வரையறுக்கிறது சூரியன். அதன் நிலையைப் பொறுத்துத்தான் மாதங்கள் உருவாகின்றன. அந்தந்த மாதங்களில் நிலவும் பருவ நிகழ்வுகளைப் பொறுத்துத்தான் விதைப்பதும் அறுப்பதும் நடக்கிறது. விவசாயத்தின் நம்பிக்கைச் சாஸ்திரம் ஜோதிடம். ஜோதிடம் காட்டும் கொள்கை விவசாயிக்கு இரண்டு கை இருந்தாலும் மூன்றாவது கை நம்பிக்கை. “நம்பி இருக்கும் கை நம்பிக்கை.” ஆக இந்த மூன்றாவது கையான நம்பிக்கை சூரியனை நம்பி இருக்கிறது. மழையை நம்பி இருக்கிறது. காற்றை நம்பி இருக்கிறது. பருவ காலங்களை நம்பியிருக்கிறது. அதை கட்டுப்படுத்தும் சக்தி மனிதனுக்கு இல்லாததால் அதனிடம் பிரார்த்தனை செய்கின்றான். நம்பிக்கை என்றாலே அது மனம் சார்ந்தது. மனம் சார்ந்த விஷயங்கள் சந்திரனின் நிலை சார்ந்தது. அதாவது மதியைச் சார்ந்தது. எனவே விவசாயத்திற்கு சந்திரனுடைய நிலை முக்கியம். அதாவது மனதின் உறுதியும் ஈடுபாடும் மிக முக்கியம் என்பது தெளிவாகிறது.எப்படிக் கூட்டிக் கழித்தாலும் அங்கே ஜோதிட சாஸ்திரம் வந்து நிற்கும். மனிதன் உழைப்பையும் தொழிலையும் காட்டுவது சனி. யாரையும் குனியவைப்பது சனி. விவசாயம் செய்பவன் முதலில் மண்ணை நோக்கி குனிய வேண்டும். நாற்று நடுவது விதை தெளிப்பது எல்லாம் குனிந்து செய்யும் வேலைகள். குனிந்து செய்தால்தான் செடி நிமிரும்.செடி நன்கு தழைத்து முற்றியபின் பாரம் தாங்காது குனியும். கதிர்கள் முற்றி குனிய, மனிதன் நிமிர்வான். குனிய வைப்பதும், குனிந்தபின் நிமிர வைப்பதும் சனி. மழை வளம், மண்வளம் அனைத்துமே சூரியனைச் சார்ந்து இருக்கிறது. மழைக்குக் காரணம் உஷ்ணம். உஷ்ணத்திற்கு காரணம் சூரியன். சூரியன் நீரை உறிஞ்சி ஆவியாக்குகிறது. பிறகு குளிர்ந்து மழை பெய்கிறது. குளிர்ச்சிக்குக் காரணம் சந்திரன். நீர் பூமியின் பரப்பில் மூன்று பங்கு இருக்கிறது. பூமியில் விழும் நீர் என்றபோது செவ்வாயும் சந்திரனும் வந்துவிடுகிறது. செவ்வாய்க்கு மங்கள காரகன் என்று பெயர். சர்வ மங்களம் தருபவன். எனவே விவசாயக் காரணிகளுக்கு அடிப்படையான பூமியும், நீர் பொழியவும் வெளிச்சம் தந்து மகரந்தச் சேர்க்கை (ஒளிச்சேர்க்கை) நிகழவும் சூரியனும் சந்திரனும் காரணமாகிறது. இந்த மூன்று கிரகங்கள் (சூரியன்,செவ்வாய்,சந்திரன்) மற்ற கிரகங்களின் துணையோடு பருவநிலையை நிர்ணயித்து பயிரை வளரச் செய்கின்றன. விவசாயத்துக்கு அடிப்படையான இத்தகைய ஜோதிட சாஸ்திரத்தை மதித்து காலம் பார்த்து பயிர் வளர்ப்போம். உயிர் வளர்ப்போம்.- எஸ்.கோகுலாச்சாரி