புறத்தூய்மையும் அகத்தூய்மையும் தரும் மாசிமக நீராடல்

பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

மாசி மாதம் என்பது கும்ப மாதம் என்று வழங்கப்படும் மாதம் ஆகும்.கும்பம் என்றாலே நீர்நிலைகளைக்  குறிக்கும். கால சக்ர புருஷனுக்கு இந்த ராசியானது 11 வது ராசி. ஜோதிடத்தில் இதனை லாபஸ்தானம் என்று சொல்வார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் ஐந்தாவது ராசியான பூர்வபுண்ணிய ராசி சிம்மராசி ஆகும். இந்த சிம்ம ராசிக்கு உரிய கிரகம் சூரியன். ஆத்ம காரகனாகிய  சூரியன் பதினோராம் ராசியான லாப ராசியில் இருந்து தனது ராசியான பூர்வ புண்ணிய ராசியைப் பார்க்கும் மாதம்தான் மாசிமாதம்.

இந்த சிம்ம ராசியில்தான் மக நட்சத்திரம் இருக்கிறது.  சந்திரன் மக நட்சத்திரத்தில் வரும்  பௌர்ணமி திருநாளில்   கொண்டாடப்படுகின்ற உன்னதமான விழா மாசி மக திருவிழாவாகும். சிம்ம ராசியில் குரு பகவான் வருகின்ற பொழுது கொண்டாடப்படும் திருநாள் மகாமக திருநாளாகும். இது 12 ஆண்டுக்கு ஒருமுறை  வரும் . சாந்த்ராயான  ரீதியில் மாசி மாதத்திற்கு மாகம் என்று பெயர். பௌர்ணமியில் மக நட்சத்திரம் சேருவதால்  மாகம் என்று அழைக்கப்பட்டு பின் மகமாக மாறியது என்பார்கள்.

அகம் என்றால் பாவங்கள் தோஷங்கள். மா என்றால் இல்லை. பாவங்களை போக்கும் என்பதினால் இது மாகம் எனப்படுகிறது. கடலில் சென்று இறைவனுக்கு நீராட்டி தானும் நீராடுதல் உடல் நலத்திற்கும் உயிர் நலத்திற்கும் நன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரங்களும்   ஆகம சாஸ்திரங்களும்  கூறுகின்றன. இதற்குப் புராண ரீதியான ஒரு கதையும் உண்டு.

பஞ்சபூதங்களில் நீர் முக்கியமானது. நீர் இன்றி அமையாது உலகம். இந்த நீருக்கு அதிபதியாக வருணனைக் குறிப்பிடுவார்கள். இந்த வருணன்  ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு நலிந்தான். மழை கொடுக்க வேண்டிய கடவுள் பலமின்றி இருந்ததால் உலகம் வாடியது. எங்கு பார்த்தாலும் வறட்சி.பஞ்சம். உயிர்களும் உணவின்றி வாடின.

ஒருவனுடைய குற்றங்கள் நீங்கி தூய்மை பெற வேண்டும் என்று சொன்னால்  நீராட வேண்டும்.அது மனஉறுதியோடும் பக்தியோடும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் மனக் குற்றங்களும் நீங்கும். புறந்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை  வாய்மையால் காணப்படும் என்று வள்ளுவர் இதனைக் குறிப்பிடுகின்றார். தண்ணீர்க் கடவுளான வருணனுடைய மாசு தீர  இறைவனை வழிபட்டார்.

எல்லாக் குற்றங்களையும் நீக்கும் தண்ணீரின் குற்றத்தை நீக்கி அருளினார் இறைவன். இறைவனுக்குத்  தீர்த்தன் என்றே ஒரு பெயர் உண்டு. தீர்த்தனுக்கு அற்ற பின் மற்றொரு சரண் இல்லை என்று எண்ணி தீர்த்த னுக்கே தீர்த்த மனத்த னாகி குருகூர் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை  தேவர் வைகல்  தீர்த்தங்களே  என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

கருட புராணத்தில் கடல் நீராட்டம் என்பது எல்லா நாட்களிலும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் பாவம் என்று சொல்லுகின்றது. ஆனால் கடலில் மக்கள் நீராடுவதற்கு சில நாட்களைக் கருடபுராணம்அனுமதிக்கிறது. அதில் மிக உயர்வான நாளாகவும்,  அவசியம் கடலில் நீராடி குற்றங்களைப்போக்கிக் கொள்ள வேண்டிய நாளாகவும் மாசி மகத்தைக் குறிப்பிடுகிறது. அமாவாசை முதலிய நாட்களிலும் இது அனுமதிக்கப்பட்டாலும், மாசி மகத்திற்கு உள்ள சிறப்பு வேறு நாட்களுக்கு இல்லை.

காரணம் இறைவனும் அதே கடற்கரைக்கு வந்து தீர்த்தமாடும் நாள் மாசி மக நாள் அல்லவா! அவர் தீர்த்தமாடிய தீர்த்தத்தில் மக்கள் தீர்க்கின்ற வாய்ப்பைப்  பெறும் நாள் அல்லவா!  மாசி கடலாடுதல் என்பது நம்முடைய இந்திய ஆன்மிக மரபிலும் தமிழ்நாட்டுத் தொன்மையான பழக்கவழக்கங்களிலும் இருந்து வரும் உன்னதமான விழாவாகும். சங்க காலம் தொடங்கி இவ்விழா நடைபெற்றது தொடர்பான செய்திகள் இலக்

கியங்களிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் அதிகமாக் காணப்படுகின்றன.

மதுரைக் காஞ்சி எனும் சங்க நூலில் அதன் ஆசிரியர் மாங்குடி மருதனார் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்தது பற்றிக்  குறிப்பிடுகின்றார். புறநானூற்றுப் பாடலில் சங்ககாலப் பாண்டிய மன்னன் முந்நீர் விழாவின்நெடியோன் என்று அழைக்கப்படுவதாக ஒன்பதாவது பாடல் காணப்படுகிறது.

திருஞானசம்பந்தா தன்னுடைய சென்னை மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசு வரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.

சைவத்திலும் இறைவனைத் தீர்த்தன் என்றே போற்றுவர்.

பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்

நீர் ததும்பு உலாவு கங்கை நெடுமுடி நிலாவவைத்தாய்

ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலைஉளானே

தீர்த்தனே நின் தன் பாதம் திறம் அலால் திறமிலேனே என்பது தேவாரம்.

கடலாடுதல், சிறப்பாகக் கடலும் ஆறும் சங்கமிக்கும் சங்கமத்தில் நீராடுதல், பெரும் புண்ணியத்தை தரும் என்று குறிப்பிடுகிறது சிலப்பதிகாரம். பூம்புகாருக்கு அருகில் காவிரி நதி சங்கமிக்கும் சங்கமுகத்தில் பெரும்பாலானமக்கள் அன்று வந்து நீராடுவர். நதிகளெல்லாம் சங்கமிக்கும் கடலில் இந்த தீர்த்தவாரி மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. மக்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி கடலில் இறைவன் தீர்த்தவாரி கண்டருளிய நீரில் தாங்களும் நீராடுவது பாவங்களைப் போக்கி உன்னதமான வாழ்வைத் தரும். என்பதை சிலப்பதிகாரம் கடலோடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் மடல் அவிழ் நெய்தல் காணம் தடம் உரை என்று தெரிவிக்கிறது.

திருவரங்கத்தில் கி.பி.1531-ஐ சார்ந்த விஜயநகா் காலக் கல்வெட்டின் மூலமாக உறையூரில் நடைபெற்ற மாசிமக விழா பற்றிய செய்தியை அறியமுடிகிறது.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் என்பது குறள்.மாசிமகத் திருநாள் அன்று  இறைவனே நீர் நிலைகளில் வந்து நீராடுகின்றார். அப்பொழுது அவருடைய திருவடியை நினைத்து நாமும் அதே நீரில் நீராடினால் பிறவிப் பெருங்கடலை நீந்தி விடலாம். மாசிமகத்தன்று நீராடுவதால் ஆபத்துக்கள் போகும். பாவங்கள் அழியும். எல்லாவிதமான யாகங்கள் செய்த பயன்களும் ஏற்படும். பற்பல தானங்கள் செய்த பலன்கள் கிட்டும் என்று புராணம் தெரிவிக்கிறது.

மாக ஸ்நாநைர் விபந் நாசா:

மாக ஸ்நாநைர் அகஷயா:

ஸர்வ யஜ் ஞாதி கோ மாக

ஸர்வ தான பலப்ரத:  

என்பது சுலோகம்.  

நம்முடைய இந்திய ஆன்மிக மரபில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்திற்கு பல பல சிறப்புகள் உண்டு. இதில் இன்னொரு விஷயம் இச்சிறப்புகளில் பல இருபெரும் சமயங்களான  சைவத்திற்கும் வைணவத்திற்கும்பொதுவாக இருக்கிறது. அன்றைய தினம் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் எத்தனை ஆலயங்கள் உண்டோ, அதில் பெரும்பாலான ஆலயங்களில் இருந்து, முருகனோ, அம்மனோ புறப்பட்டு தங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கடற்கரையில் தீர்த்தமாடுவதுகண்கொள்ளாக் காட்சியாகும்.

பொதுவாக ஒவ்வொரு கோயிலுக்கும் அதிலுள்ள மூர்த்திக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் திருவிழா நாளாக இருக்கும். அந்த நாளில் அந்தக் கோயிலில் மட்டுமே விசேஷங்களிருக்கும்.  ஆனால், மாசி மாதத்தில் எல்லாக் கோயில்களிலும் இருக்கக்கூடிய இறை உருவங்கள் கடற்கரையின் ஒரே இடத்தில் கூடி தீர்த்தவாரி கண்டருள்வது  என்பதும், எல்லா கோயில்களைச் சேர்ந்த அன்பர்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக்  கூடி நீராடுவதும் சமய ஒற்றுமைக்கும் சமூக ஒற்றுமைக்கும்சான்றான நாளாக மாசி மகத்தைக்  கொள்ளலாம். நம்முடைய தமிழகத்தைப்  பொறுத்த வரையிலே சென்னையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை வங்கக் கடற்கரை ஓரத்தில் உள்ள பற்பல ஊர்களில் இந்த தீர்த்தவாரிச்  சிறப்புக்கள் நடக்கும்.

குறிப்பாக சென்னை கடற்கரை, மகா பலிபுரம் கடற்கரை, புதுச்சேரி கடற்கரை, கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, பரங்கிப்பேட்டை கடற்கரை, கிள்ளை கடற்கரை, திருமலைராயன் பட்டினம் கடற்கரை என்று சொல்லிக்கொண்டே போகலாம். கும்பகோணம் போன்ற புகழ்பெற்ற ஊர்களில் தீர்த்தவாரி புஷ்கரணியில் அதாவது குளக் கரையிலும் அல்லது ஆற்றங்கரைகளிலும் நடைபெறும். கும்பகோணத்தில் இந்த மாசி மக தீர்த்தவாரிக்கென்று ஒரு குளம் உண்டு. அதற்கு மாசி மக குளம் என்று பெயர். அங்கேதான் 12 ஆண்டுக்கு ஒரு முறை மகாமகத்  திருவிழா பெரு விழாவாக நடைபெறும்.

மாசி மகத்தில் இந்த மகாமக குளத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள சைவ ஆலயங் களில் இருந்து மூர்த்திகள் வந்து தீர்த்தவாரி கண்டருள , வைணவக் கோயில்களில் இருந்து புறப்படும் மூர்த்திகள் காவிரிக்கரையில் தீர்த்தவாரி கண்டருளும்.

 மாசி மகம் ஒரு நாள் மட்டும் இவ்விழா சிறப்பாக நடக்கும் என்பது இல்லை. சில கோயில்களில் இவ்விழாவின் முன்னும் பின்னுமான பல நாட்கள்  நீடிப்பதும் உண்டு. உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் திருமுட்டம் என்னும் திருத்தலம் இருக்கிறது. அங்கே வராகப்பெருமாள் எழுந்தருளி யிருக்கிறார். இக்கோயில்  அருகாமையில் மிகச்சிறந்த புஷ்கரணி இருந்தாலும்கூட ,வராகப்பெருமாள் புறப்பட்டு பல்வேறு ஊர்களில் இறங்கி, அங்கங்கே அதற்கென உள்ள மண் மண்டபங்களில் மண்டகப்படி கண்டருளி, மாசிமகம் அன்று சிதம்பரத்துக்கு அருகாமையிலுள்ள கிள்ளை என்னும் ஊரின் கடற்கரைக்கு வந்து தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

வராகப்பெருமாள் கடல் தீர்த்தவாரி கண்டுகொள்வதற்குப் புராண ரீதியான காரணமும் உண்டு. இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைப்  பாயாகச் சுருட்டி கடலில் ஒளித்து வைத்தான். அப்பொழுது பகவான் ஸ்ரீமன் நாராயணன் வராகப் பெருமாளாக அவதாரம் எடுத்து கடலில் மூழ்கி இரண்யாட்சனுடன்  சண்டையிட்டு பூமியைக்  காத்தருளினார்.

இதனை நம்மாழ்வார், நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப கோலவராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ என்று போற்றுகின்றார். ஆண்டாள் நாச்சியாரும் பாசி தூர்த்து கிடந்த பார்மகட்குபண்டொருநாள் மாசுடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றியாய் என்று இந்த வராக அவதாரத்தை போற்றுகின்றாள்.இன்னும் பற்பல ஆழ்வார்களும் பல இடங்களில் இந்த வராகப் பெருமாள்பூமியைக் காத்த வைபவத்தைப்  பாடி இருக்கின்றார்கள். இந்த மாசி மகத்தில் தான் வராகர் பூமியை மீட்டார் என்பது புராணம்.

கிள்ளைக்கு அருகில் உள்ள ஊர் தைக்கால்.அங்கே ஒரு பள்ளி வாசல் உண்டு. அங்கே இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் கூடி வராகப்பெருமாளை  வரவேற்று அவருக்கு பல்வேறு உபசாரங்களைசெய்வது இன்றும் நடந்து வருகின்றசெயலாகும்.

காரணம் முன்பு ஒருநாள் நாயக்கர் ஆட்சியில் இப்பகுதியை நிர்வகித்துக் கொண்டிருந்த ஒரு இஸ்லாமிய பிரமுகருக்கு வந்த உடல் நோயை வராகப் பெருமாள் தீர்த்து வைத்தார். அதன் விளைவாக அவர் இந்த  மண்டகப்படியை  பரம்பரையாக  நியமித்திருந்தார் .அது இன்றளவும் நடந்துவருகின்றது.தீர்த்தவாரிக்கு பிறகு அவர் தனது ஆஸ்தானத்திற்கு எழுந்தருள ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். வழியெல்லாம் பற்பல ஊர்களில் பன்னூறு ஆண்டுகளாக அந்தந்த ஊர் மக்களால் மண்டகப்படி நடத்தப்படுகின்றன.

அவர் சென்று இறங்கும் ஊர்கள் விழாக்கோலம் கொண்டு பெருமானை வரவேற்று திருமஞ்சனம் வீதிவலம் புஷ்பப் பல்லக்கு என்று அந்தந்த ஊர் மக்களால் எவ்வளவு முடியுமோ  அவ்வளவு உபச்சாரங்கள்செய்யப்படுகின்றன.

எனவே சில பிரசித்திபெற்ற  ஊர்களிலுள்ள இறை வடிவங்கள் பற்பல ஊர்களுக்கு சென்று காட்சி தருகின்ற விழாவாகவும் இந்த மாசிமகத் திருவிழா விளங்குகிறது. திருக்கோவிலூர் பெருமாள் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு சுமார் 80 கிலோமீட்டர் பயணம் செய்து கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையை அடைகிறார். அங்கே மாசி மகத்தன்று தீர்த்தவாரி கண்டருளிய  பிறகு புறப்பட்டு பற்பல ஊர்களில் மண்டபங்களிலும் கோயில்களிலும்  இறங்கி மண்டகப்படி கண்டருளுகிறார். பின் தனது ஆஸ்தானமாகிய திருக்கோவிலூ ருக்கு சேருகிறார்.

இடையில் பல ஊர்களில் அந்தந்த ஊர்களில் உள்ள சந்நதி பெருமாளோடு இணைந்து வீதி உலாக்களும் உற்சவங்களும் கண்டருள்வது மிக விசேஷமாகும். சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சித்திரகூடப் பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு வங்கக்கடல் கிள்ளைக்குச் சென்று  தீர்த்தவாரி கண்டருளி வழியில் பல ஊர்களில் தங்கி திருக்கல்யாண உற்சவமும் திருமஞ்சன உற்சவங்களும் நடந்து ஆஸ்தானம் அடைகிறார். திருக்கண்ணபுரம் பிரமோற்சவம் மாசி மகம் சார்ந்தே நடைபெறும்.

பெருமாள் திருமலை ராயன் கடற்கரையில் மீனவ அன்பர்களால் வரவேற்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.அவர்கள் இப்பெருமானை மாப்பிள்ளை சாமீ என்று பரிவோடு போற்றுவார்கள்.கடல் அரசன் பெண்ணான மஹாலஷ்மியை மணந்தவரல்லவா.  இப்படிப்பட்ட மாசிமக நன்னாளில்  அந்த இறைவனோடு சென்று வணங்கி வழிபட்டு நாமும் நன்மையை அடைவோம்.

Related Stories: