தைப்பூசத் திருநாளில்...

தைப்பூசம் 28-1-2021

தைப்பூச நாளில் பழநியில் முருகனின் அபிஷேக ஆராதனைகளை தரிசித்தால் பாவங்கள் விலகும். இன்று தம்பதி சமேதராய் நற்காரியங்கள் செய்ய வளமான வாழ்வு கிட்டும்.

*பராசக்தி, தாமி ரபரணியில் நீராடி இறைவன் அருள் பெற்றது தைப்பூசத்தன்றுதான். இன்று சிவன், முருகன், மகாலட்சுமி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். வியாழனன்று தைப்பூசம் வருவதால் அன்றைய தினம் செய்யப்படும் மகாலட்சுமி பூஜை மகத்தான பலன்களைத் தரும்.

*தைப்பூச தினத்தில் திருநெல்வேலியில் உள்ள அம்பாசமுத்திரம், காசியப்பநாதர் ஆலயத்தில் உள்ள நடராஜருக்கு புனுகு சாத்தி சிறப்பு பூஜைகள் செய்வார்கள். எனவே அத்தல நடராஜர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார். அன்று இத்தல ஈசனுக்கு தேனாபிஷேகம் செய்வார்கள். இவ்வாண்டு தைப்பூசம் வியாழக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.

*நடராஜரும் சிவகாமியும் தம் ஆனந்த நடனத்தை முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேர்களுக்கு பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினிக்கும் ஆடி, தில்லையில் காட்சி தந்தது தைப்பூச தினத்தன்றுதான். இந்நாளில் சிவகங்கை தீர்த்தக் கரையில் ஆனந்த தாண்டவ நிகழ்ச்சியும் தீர்த்தவாரியும் நடைபெறும். ஆலய வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழாவும் விமரிசையாக நடைபெறும். அப்போது பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி முனிவர் மூவரும் ஒரே பீடத்தில் எழுந்தருள்வார்கள்.

*தைப்பூசத்தன்று வள்ளி மலையில் வேல் வகுப்புப் பாடலை பஜனையாக பக்தர்கள் பாடி மகிழ்வது வழக்கம்.

*மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில்தான் சொக்கரும் மீனாட்சியும் தீர்த்தவாரி உற்சவம் காண்பார்கள். இக்குளம் வெட்டும் போது கிடைத்த மிகப்பெரிய விநாயகர்தான் மதுரை முக்குறுணிப் பிள்ளையார்.

*மயிலையில், பூம்பாவையின் அஸ்தி கலசத்தை வைத்து கபாலியைக் குறித்து மனமுருக வேண்டி 11 பதிகங்கள் பாடினார் திருஞான சம்பந்தர். சிவனருளால் அஸ்தி கலசத்திலிருந்து பூம்பாவை உயிரும் உடலும் பெற்று எழுந்து வந்தாள். சம்பந்தரின் அந்தப் பாடல்கள் ஒன்றில், ‘தைப்பூசம் காணாதே போதியே பூம்பாவாய்’ எனும் வரி குறிப்பிடத்தக்கது. அதாவது அந்நாளிலேயே தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது.

*குளித்தலை, கடம்பவனநாதர் ஆலயம் எதிரே அகண்ட காவிரி ஓடுகிறது. தைப்பூசத்தன்று கடம்பவனநாதர், சப்தகன்னிகளுக்கு தரிசனமளிப்பார். அதையொட்டி அருகேயுள்ள சிவாலய உற்சவர்களும் சப்பரத்தில் சிறப்பு அலங்காரங்களுடன் காவிரிக்கரையில் கூடுவர். எட்டு சிவாலய மூர்த்திகளை அங்கு ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.

*மேல்மருவத்தூரில், ஆயிரக்கணக்கான பெண்கள் தீபத்தை கைகளில் ஏந்தியவாறு ஜோதி வளாகத்திற்குள் ஊர்வலமாக வருவார்கள். அங்கு தீபத்திற்கு திருஷ்டி கழிக்கும் சடங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும். பின்னர் பூச ஜோதி ஏற்றப்படும்.

*சிவகங்கை மாவட்டம் - நாட்டரசன் கோட்டை, கண்ணாத்தாள் ஆலயத்தில் தைமாதம் முதல் செவ்வாயன்று உலகெங்கிலும் உள்ள நகரத்தார் குடும்ப கன்னிப்பெண்கள் ஒன்று கூடி பொங்கலிடுவார்கள். அன்று ஆலயத்தில் பெண் பார்க்கும் நிகழ்வும் நடக்கும். இது ஒரு ஆன்மிகம் சார்ந்த வித்தியாசமான சுயம்வரமாகக் கருதப்படுகிறது. கண்ணாத்தாள் அருள், அவித்த நெல்லையும் முளைக்க வைக்கும் சக்தி படைத்தது.

*திருவேற்காடு கருமாரி ஆலயத்தில் தைப்பூச விழா 19 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.                                                ˜

Related Stories: