திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில், தை பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை பூசத்தை முன்னிட்டு நேற்று அண்ணாமலையாருக்கும், உண்ணா முலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மேலும், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள கம்பத்திளையனார் சன்னதி, கோபுரத்திளையனார் சன்னதிகளில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.அதைத்தொடர்ந்து, காலை 11.30 மணி அளவில் கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. தவில், நாதஸ்வரம், உடல் இசை முழங்க வீதிவலம் வந்து ஈசான்ய குளக்கரையில் சந்திரசேகரர் வடிவாக அண்ணாமலையார் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, ஈசான்ய குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது.