52 சர்வதேச விருதுகளை பெற்ற மாமனிதன் தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

சென்னை: ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் ‘மாமனிதன்’ திரைப்படம் வெளியானது. எளிய மக்களின் கதைகளை கையில் எடுக்கும் இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தையும் அதுபோல் இயக்கி இருந்தார். இதில் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இருந்தார். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த திரைப்படம் வெளியானது.

இப்படம் ரஷ்யா சர்வதேச திரைப்பட விழா உள்பட பல வெளிநாட்டு, உள்நாட்டு பட விழாக்களில் இதுவரை 52 விருதுகளை பெற்றது. மனித நேயத்தை வலியுறுத்தும் இப்படத்துக்கு தேசிய விருது கிடைக்காததை திரையுலகினர் பலரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ‘உலகம் முழுவதும் 52 விருதுகளைப் பெற்ற தமிழ்த் திரைப்படமான ‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு தேசிய விருது பாகுபாடு காட்டியுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான உண்மை.

மிகுந்த ஏமாற்றமளிக்கிறது அனுராக் தாக்கூர் அவர்களே. சமூக நல்லிணக்கத்தைக் கொண்டாடும் தமிழ்த் திரைப்படத்திற்கு ஏன் இதுபோன்ற பாகுபாடுகளைக் காட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில் ‘மாமனிதன்’ படத்துக்கு சர்வதேச விருதுகள் கிடைத்ததை கவுரவிக்கும் விதமாக டெல்லி தமிழ் சங்கம் சார்பில் ‘மாமனிதன்’ படம் திரையிடப்படுகிறது. டெல்லி ராமகிருஷ்ண புரத்தில் உள்ள தமிழ் சங்க வளாகத்தில் செப்டம்பர் 3ம் தேதி மூன்று திரையிடல் நடைபெற உள்ளது.

The post 52 சர்வதேச விருதுகளை பெற்ற மாமனிதன் தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்டது ஏன்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: