பாலக்காடு : பாலக்காடு ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்டு அருகே சாலையோரம் நடைபாதையில் நாடோடி பெண்ணுக்கு பெண் குழந்தை நேற்று பிறந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாவட்ட மருத்துவமனை அவசர பிரிவுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை தொடர்ந்து கருணை 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் ஆம்புலன்ஸ் பைலட் ஏ.ஆர்.ஸ்ரீவல்சன், எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியன் எஸ்.பிரியங்கா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து குழந்தையை பிரசவித்த நாடோடி பெண் சுதாவுக்கு (40) உரிய சிகிச்சை அளித்து, காப்பாற்றினர். இதனையடுத்து தாய், சேயை ஆம்புலன்சில் ஏற்றி பாலக்காடு மாவட்ட மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் தாய் சுதாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு டெக்னீஷியன் பிரியங்கா முதலுதவி சிகிச்சை அளித்து அபாய நிலையில் இருந்து மீட்டார். தொடர்ந்து மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.
தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர். இதையடுத்து உரிய நேரத்தில் விரைந்து செயல்பட்ட ஆம்புலன்ஸ் பைலட் ஸ்ரீவல்சனுக்கும், டெக்னீஷியன் பிரியங்காவிற்கும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தரப்பில் பாராட்டு குவிகிறது.
The post நடைபாதையில் நாடோடி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.