61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் எதிரொலி வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைந்து மீன்கள் விலை உயர்வு

*விற்பனைக்கு வராத வஞ்சிரம்

வேலூர் : மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் வேலூர் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மார்க்கெட்டிற்கு வஞ்சிரம் வரத்து இல்லை.

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கி ஜூன் 14ம் தேதி வரை கடலில் மீன்கள் இனபெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் மீன்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வரத்து குறைந்ததால் வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

வேலூர் இறைச்சி மார்க்கெட்டை பொறுத்தவரை சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு ஆகிய இடங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 முதல் 7 பெரிய சரக்கு லாரிகளில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் 61 நாட்களுக்கு குறைந்தளவு மீன்கள் மங்களூரு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் இருந்து வருகிறது.

நேற்று தேங்காய் பாறை ரூ.400, சங்கரா ரூ.250-400, இறால் ரூ.350-500, வெல்ல கொடுவா ரூ.500-1000, கலங்கா ரூ.220, ஏரி விரால் ரூ.500, சால மீன் ரூ.800, நண்டு ரூ.350-450, ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் மீன்கள் கிலோ ரூ.120 முதல் ரூ.150, ஜிலேபி ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 40 நாட்களுக்கு இதே நிலைதான் தொடரும். மீன்பிடி தடைக்காலம் என்பதால் வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு வஞ்சிரம் மீன் விற்பனைக்கு வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் எதிரொலி வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைந்து மீன்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: