புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். மும்பை குற்றப்பிரிவு போலீசார் மும்பை தாக்குதல் வழக்கில் தஹாவூர் ராணாவுக்கு(64) எதிராக 405 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். கொலை,கொலை முயற்சி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மும்பையில் தாக்குதல் மேற்கொள்வதற்காக முக்கிய சதிகாரர் டேவிட் கோல்மேன் ஹெட்லிவுக்கு உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தஹாவூர் ராணா கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது.பல ஆண்டுகள் முயற்சியின் பலனாக இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அமெரிக்க அதிகாரிகள் ராணாவை இந்திய குழுவினரிடம் ஒப்படைத்ததை அடுத்து, சிறப்பு விமானத்தில் நேற்று முன்தினம் ராணா டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையம் வந்தடைந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் முறைப்படி கைது செய்தனர். பின்னர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் அனுமதி கோரினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராணாவை பலத்த பாதுகாப்புடன் என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். என்ஐஏ அலுவலகத்தில் அதிக பாதுகாப்பு கொண்ட அறையில் அவர் அடைக்கப்பட்டார். அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஐஏவில் துணை ராணுவம்
தஹாவூர் ராணா அடைத்து வைக்கப்பட்டுள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி கூறுகையில்,‘‘ சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் என்ஐஏ அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.
இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ்,‘‘மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை அமெரிக்கா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது. மேலும் அதிபர் டிரம்ப் கூறியது போல், உலகளாவிய பயங்கரவாதக் கொடுமையை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும். 6 அமெரிக்கர்கள் உட்பட 166 உயிர்களின் துயர மரணத்திற்கு வழிவகுத்த தாக்குதல்கள் சிலருக்கு நினைவில் இருக்காது. இது முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சூழ்நிலையின் முக்கியத்துவத்தில் இது எவ்வளவு கொடூரமானது என்பதைக் கண்டறிய அவற்றைப் பார்க்க வேண்டும்’’ என்றார்.
The post நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் என்ஐஏ காவல்: சிறப்பு கோர்ட் அனுமதி appeared first on Dinakaran.