ஒன்றிய அரசு அறிவிப்பு: எம்பிக்களின் சம்பளம் ரூ.1.24 லட்சமாக உயர்வு; 2023ம் ஆண்டு ஏப்.1 முன்தேதியிட்டு அமல்

புதுடெல்லி: எம்பிக்களின் சம்பளம் ரூ.1.24 லட்சமாக உயர்த்தி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களுக்கு தற்போது மாதம் ரூ.1 லட்சம் சம்பளமும், அவை நடக்கும் நாட்களில் தினசரி அலவன்சாக ரூ.2000ம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எம்பிக்களின் சம்பளம் மற்றும் தினசரி அலவன்ஸ் தொகை மற்றும் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு: செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் 2023 ஏப்ரல் 1ம் தேதி முன்தேதியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும் எம்பிக்களுக்கான தினசரி அலவன்ஸ், முன்னாள் எம்பிக்களுக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது 24 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஒரு எம்பியின் சம்பளம் இனிமேல் மாதம்தோறும் ரூ.1.24 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.

அதே போல் தினசரி அலவன்ஸ் 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மாதம் 25,000 ரூபாயில் இருந்து 31,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் எம்பியாக இருந்தவர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் மாதம் ரூ.2,000லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செலவு பணவீக்க குறியீடு அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ்கள் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 2018ல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, எம்.பி.க்களின் சம்பளத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தினார்.
* 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை தானாக மாற்றியமைக்கும் திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.
* 2020ம் ஆண்டில், கொரோனா பரவியபோது ஒரு வருடத்திற்கு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்பட்டது.

ஒரு எம்பிக்கு என்னென்ன கிடைக்கும்?
* மாதம் சம்பளம் ரூ.1.24 லட்சம்
* தொகுதி உதவித்தொகை மாதம் ரூ.87,000(முன்பு ரூ.70,000)
* அலுவலகச் செலவு மாதம் ரூ.75,000(முன்பு ரூ.60,000)
* ரூ.75,000 அலுவலகச் செலவு, கணினி அறிவு பெற்ற ஒருவரின் சேவையைப் பெற மாதம் ரூ.50,000 மற்றும் எழுது பொருட்கள் வாங்கும் செலவுக்கு ரூ.25,000ம் ஒதுக்கப்படும்.
* எம்.பி.க்கள் தங்கள் பதவிக் காலத்தில் ரூ. 1.25 லட்சம் மதிப்பு நாற்காலி, சேர் வாங்க நிதி ஒதுக்கப்படும். முன்பு ரூ.1 லட்சம் ஒதுக்கப்பட்டது.
* டெல்லியில் 2 படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தங்கும் விடுதி அல்லது பங்களா ஒதுக்கப்படும்.
* எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லிக்கு 34 முறை வருவதற்கு விமான டிக்கெட் வழங்கப்படும். ரயில் டிக்கெட் சலுகையும் உண்டு.

The post ஒன்றிய அரசு அறிவிப்பு: எம்பிக்களின் சம்பளம் ரூ.1.24 லட்சமாக உயர்வு; 2023ம் ஆண்டு ஏப்.1 முன்தேதியிட்டு அமல் appeared first on Dinakaran.

Related Stories: