புதுடெல்லி: ‘இந்தியா’ கூட்டணி தற்போது செயலிழந்து வரும் நிலையில் இருப்பதாகவும், அதனை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும் கூட்டணிக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகள் தொய்வடைந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இக்கூட்டணி குறித்து கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘இந்தியா கூட்டணி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நோயாளியைப் போல இருக்கிறது; அவ்வப்போது சில அதிர்வுகளைக் கொடுத்து உயிர்ப்பித்தாலும், பீகார் தேர்தல் போன்ற சறுக்கல்கள் மீண்டும் அதனை படுக்கையில் தள்ளிவிடுகின்றன’ என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேலும், ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகளைத் தவிர்த்துவிட்டு பீகாரில் தொகுதிப் பங்கீடு செய்தது மிகப்பெரிய சறுக்கல்; பாஜகவின் தேர்தல் வியூகம் மற்றும் உழைப்பு ஈடு இணையற்றது’ என்றும் அவர் கூறினார். மாநில கட்சிகளுக்கு எல்லைகள் இருப்பதால், பாஜகவை எதிர்க்கும் ஒரே தேசிய கட்சியான காங்கிரஸ் தான் முன்னின்று வழிநடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். உமர் அப்துல்லாவின் இந்த வெளிப்படையான விமர்சனத்தை ஏற்றுக்கொண்டுள்ள சிவசேனா (உத்தவ் அணி) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, கூட்டணியை உடனடியாகச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை; எனவே உடனடியாக அனைத்து கட்சிகளும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து நிலைமையை மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். மேலும், ‘கூட்டணியின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்து, மீண்டும் புத்துயிர் அளித்து, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். உள்கட்சி பூசல்கள் மற்றும் தெளிவான வியூகம் இல்லாததே தற்போதைய தேக்கநிலைக்குக் காரணம் என்பதால், உடனடியாகத் தலைவர்கள் கூடிப் பேச வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
