மாணவி மதி மரண வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி, அக். 19: மாணவி மதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி(17) என்பவர் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு, பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

தனியார் பள்ளி மாணவி மதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் உயிரிழந்த மாணவி மதியின் தாயார் செல்வி, பள்ளி நிர்வாகத்தினர் மீது சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த வழக்கின் எப்ஐஆர் நகல், சிசிடிவி காட்சிகள், ஆடியோ பதிவுகள், மரண வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருவரை சேர்க்க வேண்டும், ஆகியவற்றை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அதற்கான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கப்படலாம், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டார்.

The post மாணவி மதி மரண வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: