விருத்தாசலம் அருகே வாகன சோதனையில் ரூ.3.40 லட்சம் பறிமுதல்

விருத்தாசலம், மார்ச் 21: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணமோ, பரிசு பொருளோ தருவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைத்து இடங்களிலும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட மேற்கிருப்பு பகுதியில் விருத்தாசலம் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி சுகன்யா தலைமையில் தலைமை காவலர்கள் அன்பரசன், அருணா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக காரில் வந்த மேற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்த விஜயசேகர் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், விருத்தாசலம் தாசில்தார் பிரகாஷிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பணம் விருத்தாசலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: