மயிலம், மார்ச் 17: மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேளாங்கண்ணி சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சக்கரக்கனி மகன் பரணி கண்ணன் (37) என்பவர் நேற்று தனது வேனில் 17 பக்தர்களுடன் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்றுள்ளார். மயிலம் அடுத்துள்ள ஜக்காம்பேட்டை அருகே திண்டிவனம் நீதிமன்றம் எதிரே வேன் வந்தபோது திடீரென ஓட்டுனருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் இருந்த தடுப்புக்கட்டையின் மீது மோதி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த டிரைவர் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். 11 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலம் அருகே வேளாங்கண்ணி சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து
- வேளாங்கண்ணி
- Mayilam
- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- ஜக்கம்பேட்டை
- பரணி கண்ணன்
- சக்கரக்கனி
- சாலிகிராமம், சென்னை
