காரில் கடத்தப்பட்ட 50 மதுபாட்டில்கள் பறிமுதல்

விக்கிரவாண்டி, மார்ச் 25: விக்கிரவாண்டி அருகே காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி அழுக்கு பாலம் அருகில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் மற்றும் விழுப்புரம் தோட்டக்கலை அலுவலர் மூக்கம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகிலாண்டம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவர்கள் சென்னை ஹபிபுல்லா ரோடு பகுதியை சேர்ந்த சங்கர், மாருதி என்பதும், இவர்கள் திருமண நிகழ்ச்சிக்காக 50 மதுபாட்டில்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் உதவி தேர்தல் அலுவலர் மகாதேவன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், சமூக நல தாசில்தார் வேல்முருகன், மண்டல துணை தாசில்தார் விஜயன் ஆகியோர் மதுபாட்டில்களை மாவட்ட கலால் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: