இந்திய கடல்சார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 1974 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்புவிழாவில் 1974 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் உள்ள தலைமையகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாலினி சங்கர் தலைமை தாங்கினார். கடல்சார் தொடர்பான பல்வேறு பாடப்பிரிவுகளில் மொத்தம் 1974 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதில் 4 பேர் பிஎச்டி பட்டமும், ஒருவர் எம்எஸ் பட்டமும் பெற்றனர்.

பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமை விருந்தினரான இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து பட்டமளிப்பு விழா உரையாற்றினார். முன்னதாக, துணைவேந்தர் மாலினி சங்கர் ஆண்டறிக்கை சமர்ப்பித்து பேசும்போது, “கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் தொடர்பாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் 5க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது” என்று குறிப்பிட்டார். விழாவில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் ராஜூ பாலாஜி, பதிவாளர் கே.சரவணன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிஷோர் தத்தாத்ரேயா ஜோஷி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

The post இந்திய கடல்சார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 1974 மாணவர்கள் பட்டம் பெற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: