இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர். அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த மாதம், கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி பிடித்ததாக குற்றம் சாட்டி கைது செய்தனர். படகு, மீன்கள், வலைகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி, ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் விடுவித்து, இந்திய தூதரக அதிகாரிகள் பராமரிப்பில் ஒப்படைத்தது. தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு விமான டிக்கெட் போன்ற வசதி செய்தனர். அதன்பின்பு நேற்று முன்தினம் இரவு கொழும்பிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 7 பேரையும் அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் 7 மீனவர்களையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: