வடக்கு மண்டல மக்கள் குறைதீர் முகாம்

மதுரை, ஜூன் 26: மாநகராட்சி வடக்கு மண்டல மக்கள் குறைதீர் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது. மதுரையில் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வடக்கு மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு மக்களின் குறைதீர் முகாம் நேற்று மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமை நடந்தது. கமிஷனர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் சரவணபுவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுக்களை கொடுத்தனர். விளாங்குடியை சேர்ந்த அன்பழகன் அளித்த மனுவில், ‘திருமால்நகரில் பாதாளசாக்கடை, தார்சாலை, குடிநீர் இணைப்பு மின்விளக்கு பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை என கூறப்பட்டிருந்தது. அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதுபோல சொத்துவரியில் பெயர் திருத்தம் செய்யக்கோரி 66வது வார்டை சேர்ந்த ராமமூர்த்தி மனு அளித்திருந்தார்.

அவருக்கு உடனடியாக பெயர் திருத்தம் செய்து அதற்கான உத்தரவை மேயர் இந்திராணிபொன்வசந்த் வழங்கினார். சாலைகள், குடிநீர், பாதாளசாக்கடை வசதி உள்ளிட்ட மொத்தம் 67மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் துணை கமிஷனர் தயாநிதி, உதவி கமிஷனர் கோபு, நகர் நல அலுவலர் வினோத்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகதார அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post வடக்கு மண்டல மக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: