மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

திருச்சி, ஜூன் 28: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ₹3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான 4.02 ஏக்கர் நஞ்சை நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து நேற்று மீட்கப்பட்டது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் எல்லக்குடியில் மலைக்கோட்டை தாயுமானசுவாமிகோயிலுக்கு சொந்தமான 4.02 ஏக்கர் நஞ்சை நிலம், அங்கு அதிககாலமாக தங்கி இருந்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மலைக்கோட்டை கோயில் நிர்வாகம் தரப்பில் திருச்சி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் கடந்த 2004ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் கோயில் நிர்வாகத்துக்கு சாதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து நிலத்தை மீட்கவும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் உத்தரவின்படி நிலமானது திருக்கோயில் கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள், திருவெறும்பூர் நில அளவையர், எல்லக்குடி கிராம நிர்வாக அலுவலர், கிராம மக்கள் முன்னிலையில் மாவட்ட உரிமையியல் கோர்ட் அமீனாவால் நேற்று சுவாதீனம் எடுக்கப்பட்டு திருக்கோயில் உதவி கமிஷனர் மற்றும் செயல் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நிலத்தின் மொத்த மதிப்பு ₹3 கோடியே 25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: