அங்கன்வாடி பணியாளரிடம் 5 சவரன் தங்க செயின் பறிப்பு பைக் ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

குடியாத்தம், ஜூன் 1: குடியாத்தத்தில் அங்கன்வாடி பெண் பணியாளரிடம் 5 சவரன் தங்கச்செயினை பறித்துச்சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளிபாபு. இவரது மனைவி ஜீவிதா(37). இவர் கொட்டமிட்டா கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜீவிதா பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். தொடர்ந்து, வீட்டின் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், திடீரென ஜீவிதாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச்செயினை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவிதா கூச்சலிட்டார். ஆனால், அதற்குள் செயினை பறித்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் பைக்கில் தப்பிச்சென்றனர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் ஓடிவந்தனர். ஆனால், தப்பிய நபர்களை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் ஜீவிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து நகையுடன் தப்பிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post அங்கன்வாடி பணியாளரிடம் 5 சவரன் தங்க செயின் பறிப்பு பைக் ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம் appeared first on Dinakaran.

Related Stories: