ஏரியில் மீன் பிடித்தவர் தவறி விழுந்து மூழ்கி பலி லாரி டியூப்பில் தெப்பல் தயாரித்து

வேலூர், ஜூன் 16:காட்பாடி தாராபடவேடு ஏரியில் லாரி டியூப்பில் தெப்பல் தயாரித்து மீன் பிடித்தவர், நீரில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். காட்பாடி அருப்புமேட்டை சேர்ந்தவர் முனியாண்டி(44). இவருக்கு மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். இவர் அடிக்கடி வீட்டின் அருகில் உள்ள தாராபடவேடு ஏரியில் லாரி டியூப்பை தெப்பலாக தயார் செய்து வலைவீசி மீன் பிடித்து வருவாராம். நேற்று முன்தினமும் தாராபடவேடு ஏரியில் வலையை வீசி வைத்திருந்தாராம். நேற்று காலை லாரி டியூப் தெப்பல் மூலம் வலையில் சிக்கிய மீன்களை சேகரிக்க சென்றார்.ஏரியின் நடுப்பகுதிக்கு சென்றபோது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு தெப்பலில் இருந்து தண்ணீரில் விழுந்து மூழ்கினார். இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் முனியாண்டி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏரியில் மீன் பிடித்தவர் தவறி விழுந்து மூழ்கி பலி லாரி டியூப்பில் தெப்பல் தயாரித்து appeared first on Dinakaran.

Related Stories: