1 லட்சம் பயனாளிகள் வீடு கட்ட கூடுதல் தொகைக்கு கூட்டுறவு வங்கி கடன் வசதி அதிகாரிகள் தகவல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்

வேலூர், ஜூன் 12: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் பயனாளிகள் வீடு கட்ட கூடுதல் தொகைக்கு கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞரின் கனவு இல்லம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். தமிழகத்தில் ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் ேநாக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி கிராம பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

குடிசையில்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் 2030ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4000, திருவண்ணாமலை மாவட்டத்தில் 4000, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4000, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3073 என 4 மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 73 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ₹3.5 லட்சம் தொகை ஒதுக்கீடு செய்யப்படும். பயனாளிகள் தங்களுடைய வீடுகளை தாங்களே கட்டிக்கொள்ள வேண்டும்.

அரசு சார்பில் இருந்து நிதி மட்டுமே தரப்படும். இந்நிலையில், அரசு ஒதுக்கிய நிதிக்கு கூடுதலாக நிதி தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ₹1 லட்சம் வரை கடனாக பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு 9.50 முதல் 10 சதவீதம் வட்டியில் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டில் தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இந்த கடன் வழங்குமாறு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர், கூட்டுறவு பதிவாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 1 லட்சம் பயனாளிகள் வீடு கட்ட கூடுதல் தொகைக்கு கூட்டுறவு வங்கி கடன் வசதி அதிகாரிகள் தகவல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: