சொலிசிட்டர் ஜெனரல் காலஅவகாசம் கோரியதால் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 10க்கு ஒத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை மற்றும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டன.

மேற்கண்ட உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபஸ் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க வேண்டும். ஆனால் அவர் வேறு ஒரு சிறப்பு விசாரணை அமர்வில் ஆஜராகி இருந்ததால், இந்த வழக்கினை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விசாரணையை நாளைக்கு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை கேட்காமல் எந்தவித முடிவோ அல்லது உத்தரவோ பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

The post சொலிசிட்டர் ஜெனரல் காலஅவகாசம் கோரியதால் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 10க்கு ஒத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: