நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது

சூரத்: நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் குஜராத்தை சேர்ந்த மத குரு கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த மதகுருவான முகமது ஷோஹைல் என்ற அபுபக்கர் டீமோல் (27) என்பவரை, நேற்று சூரத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சூரத் காவல்துறை ஆணையர் அனுபம் சிங் கெலாட் கூறுகையில், ‘சர்ச்சைக் குரிய கருத்து கூறி பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி நூபுர் சர்மா, பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், இந்துத்துவா தலைவர் உபதேஷ் ராணா ஆகியோரைக் கொல்வதற்காக முகமது ஷோஹைல் சதித்திட்டம் தீட்டியிருந்தார். அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்த போது, அவர் பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

உபதேஷ் ராணாவைக் கொல்வதற்காக பாகிஸ்தானில் ஆயுதங்கள் ஆர்டர் செய்துள்ளார். இவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் பல ரகசிய தகவல்கள் கிடைத்தன. கைது செய்யப்பட்ட முகமது ஷோஹைல், சூரத் அடுத்த கத்தோர் கிராமத்தில் சேர்ந்தவர் ஆவார். நூல் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர், தனது வீட்டில் குழந்தைகளுக்கு மதம் ெதாடர்பான பாடங்களையும் எடுத்து வருகிறார். அதனை அப்பகுதியினர் மவுலவி என்று அழைக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது appeared first on Dinakaran.

Related Stories: