(தி.மலை) அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று

 

திருவண்ணாமலை, பிப்.12: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனக்காக வருகின்றனர். இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் கடந்த இரண்டு நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், அதிகாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரம் வரை தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் கோயிலில் தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரம் தற்போது குறைந்திருக்கிறது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ், நேற்று லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கேப்சன் விடுமுறை தினமான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

The post (தி.மலை) அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று appeared first on Dinakaran.

Related Stories: