செங்கம், மார்ச் 20: செங்கம் அருகே சமைத்து சாப்பிடுவதற்கு வனப்பகுதியில் கீரிப்பிள்ளையை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மணிக்கல் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் ராமு(32). இவர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கீரிப்பிள்ளைகளை வேட்டையாடுவதற்காக நேற்று வலைகளுடன் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், சந்தேகத்தின் பேரில் ராமுவைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ராமு வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது அதில் வேட்டையாடப்பட்ட ஒரு கீரிப்பிள்ளை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அவரிடமிருந்த கீரிப்பிள்ளை, வேட்டைக்கு பயன்படுத்திய வலைகள் மற்றும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராமுவை கைது செய்த வனத்துறையினர், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
