திருவண்ணாமலை, மார்ச் 18: திருவண்ணாமலையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் அபய மண்டபம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், காரை பயணம் செய்த கர்நாடக மாநிலம், சிக்மலாபூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவர், வியாபாரம் தொடர்பாக இந்த தொகையை கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்த ரூ.2 லட்சத்தை மாவட்ட கருவூலத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.
