நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ உத்தரவாதம்

சென்னை: துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பொறியியல் பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப்பதிவு செய்தது. சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், என்ஐஏ, நாதக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது. இந்நிலையில், என்ஐஏ சம்மனை ரத்து செய்யக் கோரி நாதக இளைஞரணி அமைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.சங்கர், சேவியர் பிலிக்ஸ் ஆகியோர் ஆஜராகி, காலையில் சம்மன் அளித்துவிட்டு உடனடியாக அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவித்துள்ளார்கள் என வாதிட்டனர். என்ஐஏ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மனுதாரர் 5ம் தேதி ஆஜராகலாம் என்று தெரிவித்துள்ளோம். கைது நடவடிக்கை எதுவும் இருக்காது. சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்போம் என்றார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ உத்தரவாதம் appeared first on Dinakaran.

Related Stories: