ஜோலார்பேட்டையில் பைக்குகள் மோதி 3 பேர் காயம் விபத்தில் சிக்கியவர் மீது லாரி ஏறி கால் நசுங்கியது

*பொதுமக்கள் சாலை மறியல்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் நடந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். அப்போது விபத்தில் சிக்கியவர் மீது லாரி ஏறியதால் அவரது கால்கள் நசுங்கியது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள சந்தைகோடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் (28), குமார் (27). இவர்கள் பைக்கில் திருப்பத்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது அதே பகுதியில் விஏஓ அலுவலகம் அருகே உள்ள வாணியம்பாடி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி (32) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு 3 பேரும் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி, சாலையில் படுகாயத்துடன் விழுந்து கிடந்த சங்கரின் கால்கள் மீது ஏறி இறங்கின. இதில் அவரது 2 கால்களும் நசுங்கியது. இதனால் அவர் அலறி துடித்தார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், ஆம்புலன்ஸ் உடனடியாக வராததை கண்டித்தும், விபத்து நடந்த பகுதியில் பேரிகார்டு அமைக்கக்கோரியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்தது. விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பகுதியில் பேரிகார்டு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று சுமார் 45 நிமிடம் கழித்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே விபத்து தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஜோலார்பேட்டையில் பைக்குகள் மோதி 3 பேர் காயம் விபத்தில் சிக்கியவர் மீது லாரி ஏறி கால் நசுங்கியது appeared first on Dinakaran.

Related Stories: