50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வேளாண் அதிகாரி தகவல் வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு

வேலூர், அக்.10: வேலூர் மாவட்டத்தில் செங்கல்பட்டு சிறுமணி, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், பாரம்பரிய நெல் வகைகளின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரக விதைகள் வேளாண்மை துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் விநியோகம் செய்திட ஏதுவாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பாரம்பரிய நெல் ரகங்களான செங்கல்பட்டு சிறுமணி, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை விலையான கிலோ ஒன்றிற்கு ₹50ல் 50 சதவீதம் அரசு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சம் 10 கிலோ வரை அரசு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் ரகங்களை பெற்று சாகுபடி செய்து பயனடையலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வேளாண் அதிகாரி தகவல் வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு appeared first on Dinakaran.

Related Stories: