கே.வி.குப்பம், மார்ச் 24: கே.வி.குப்பத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம், கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் தொடங்கி, காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள பஸ் நிலையம் வரை சென்று, பின் கவசம்பட்டு சாலை, பஜார் வீதி வழியாக என ஊராட்சியின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அந்த பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தமிழக அரசு கல்விக்காக செயல்படுத்திய திட்டங்களான, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக நடந்து சென்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர்கள், அங்குள்ள பொதுமக்கள், பெற்றோர்களுக்கு அரசு பள்ளிகளின் சிறப்பம்சங்கள், அரசு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளம்பர பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். அதில் இடைநிற்றலைத் தவிர்த்து, அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல், ஆங்கில வழிக்கல்வி, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், சத்தான மதிய உணவு மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகள் என அரசு பள்ளி குறித்து சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
