மீன்பிடி தடைக்காலம் எதிரொலி சென்னையில் மீன் விலை உயர்வு: வஞ்சிரம் ரூ.1000, வவ்வால் ரூ.700, நண்டு ரூ.400க்கு விற்பனை

சென்னை: மீன் பிடிதடைக்காலம் எதிரொலியாக சென்னையில் வழக்கத்தை விட நேற்று மீன் விலை கடுமையாக அதிகரித்தது. வஞ்சிரம் ரூ.1000, வவ்வால் ரூ.700, நண்டு ரூ.400க்கும் விற்பனையானது. ஆனால், விலையைப் பற்றி கவலைப்படாத அசைவ பிரியர்கள் மீன்களை அதிகளவில் போட்டி போட்டு நேற்று வாங்கிச் சென்றனர். தமிழக கடல் பகுதியில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலம் வருகிற 14ம் தேதி வரை உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதாவது சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை.

சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், வலைகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் மார்க்கெட்டுகளுக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால், தடைக்காலம் தொடங்கியதில் இருந்து மீன் விலை அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வேறு. அனைவரின் வீடுகளில் அசைவ உணவுகளை சமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க காலை முதல் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதே நேரத்தில் தடைக்காலம் வேறு உள்ளதால் நேற்று விலை கடுமையாக அதிகரித்தது. அதாவது சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் நேற்று சங்கரா கிலோ ரூ.300, நெத்திலி ரூ.250, வஞ்சிரம் ரூ.1000, இறால் ரூ.350, நண்டு ரூ.400, சீலா ரூ.400, வவ்வால் ரூ.700, கட்லா ரூ.300, சுறா ரூ.450, மத்தி மீன் ரூ.200 என்றும் விற்கப்பட்டது.

மீன் விலை அதிகரித்தாலும் மீன்களை அசைவ பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது. அதே போல நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது. மீன்பிடி தடைக்காலம் வருகிற 14ம் தேதி முடிகிறது. அதுவரை மீன் விலை குறைய வாய்ப்பில்லை. தடைக்காலம் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகே மீன் விலை குறையும் என்றும் மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post மீன்பிடி தடைக்காலம் எதிரொலி சென்னையில் மீன் விலை உயர்வு: வஞ்சிரம் ரூ.1000, வவ்வால் ரூ.700, நண்டு ரூ.400க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: