திருவண்ணாமலை,டிச.8: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தரமான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக வழங்கப்படுவது ஏன்? என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர். திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அனைவருக்கும் உரிய நிவாரணம் பாகுபாடு இன்றி வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் பல லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். அனைவருக்கும் உரிய காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும்.