சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு – பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதில் தவெக தோல்வியடையக் கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை, தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை என புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
எனவே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதல் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
