சென்னை: முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வரின் முதன்மை செயலாளரான செந்தில்குமாருக்கு நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மின்துறை, தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2வது செயலாளரான லட்சுமி பிரியாவுக்கு, முதல்வர் அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம், அரசியல் சார்பற்ற நேர்முக சந்திப்பு மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள், அரசு நெறிமுறைகள் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
3வது செயலாளரான அண்ணாதுரைக்கு இயற்கை வளத்துறை, நீர்வளத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சமூக சீர்திருத்தத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, போக்குவரத்துத்துறை, சட்டத்துறை, சட்டப்பேரவைச் செயலகம், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக உள்ள விஷ்ணுவிற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
