18ம் தேதி வரை லேசான மழை பெய்யும் 3 மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, 18ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் வெப்பமும் இயல்பைவிட 2-3 செல்சியசாகவே நீடித்து வருகிறது. வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதும் நிகழாத நிலையில், அதிகபட்ச வெயில் கரூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் நேற்று 104 டிகிரியாக இருந்தது.

மேலும், சேலம், மதுரை, நாமக்கல், ஈரோடு, கோவையில் 102 டிகிரி வெயில் இருந்தது. இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரையில், ஜார்க்கண்ட, மேற்குவங்கம், ஒடிசா, சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நீடித்து வருகிறது. அதன் காரணமாக 20ம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவும். இதற்கிடையே, 18ம் தேதி வரையில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அதிகவெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் இயல்பை ஒட்டியே வெப்பநிலை நீடிக்கும்.

Related Stories: