திருத்தணி, ஏப்.9: வலிமையான ஜனநாயகம் அமைய, அனைவரும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருத்தணியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருத்தணி நகராட்சி சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை நகராட்சி ஆணையர் கன்னியப்பன் தொடங்கி வைத்தார். இதில், நகர அமைப்பு அலுவலர் தயாநிதி, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், பணி மேற்பார்வையாளர் நாகராஜன் உள்பட நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அக்கைய்யா சாலை, சித்தூர் சாலை, ரயில் நிலையம், ம.பொ.சி சாலை உள்ளிட்ட நகர முக்கிய வீதிகளில் தூய்மை காவலர்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறைவாக விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
