திருவள்ளூர், ஏப்.9: திருவள்ளூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், திருவள்ளூர் – செங்குன்றம் நெடுஞ்சாலை மூலக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியபோது. அதில், உரிய ஆவணமின்றி 20 சவரன் நகைகள் இருந்தது கண்டறியப்பட்டு, அதனை பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட 20 சவரன் நகைகளை, தேர்தல் பறக்கும் படையினர், திருவள்ளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சு.ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
கோட்டாட்சியர் விசாரணையின்போது பூங்கா நகர் பகுதியை சேர்ந்த மைதிலி என்பதும், அவர் சித்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்மா வீட்டிலிருந்து நகையை எடுத்து வந்ததாக தெரிவித்தார். அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் நகையை பறிமுதல் செய்து, கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், திருவள்ளூர் அடுத்த கரிகலவாக்கம் அருகே வாகன சோதனையின்போது, பொருட்களை வாங்க உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்து திருவள்ளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சு.ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவர், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 20 சவரன் நகைகளையும், ரூ.1.30 லட்சம் பணத்தையும் பெற்று செல்லுமாறு, அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
