தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கணேசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்படும் என உள்ளூர் தாமரை கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக, அக்கட்சியை சேர்ந்த பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கனுக்கு சீட் கிடைக்குமென ஆவலுடன் காத்திருந்தனர். இதற்காக தீவிர களப்பணியாற்றி வந்தனர். ஆனால், சாத்தூர் தொகுதி பாஜ மாநில தலைவருக்கு ஒதுக்கப்பட்டதால், கடைசி நேரத்தில் விருதுநகர் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் பாஜ கட்சி தொண்டர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் மாவட்ட பாஜ அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பாஜ விருதுநகர் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரும், தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான கஜேந்திரன் தனது முகநூல் பக்கத்தில், ‘‘தாமரை மலர்ந்தே தீரும். என்னுடைய ஒரே இலக்கு என்னுடைய சொந்த பூத்தில் தாமரை சின்னத்திற்கு அதிக வாக்கு வாங்கி கொடுப்பது, தாமரை மலரச் செய்வது’’ என பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நிலையில், இவர் எப்படி தாமரைக்கு வாக்கு பெற்று தருவார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த விபரமே தெரியாமல் பாஜ தொண்டர்கள் அவருக்கு ‘வாழ்த்துக்கள் ஜி’ என பதிவிட்டு வருவது தலைசுற்ற வைக்கிறது.
