ஓட்டை பிரிக்கத்தான் வந்திருக்காரு விஜய்: லாட்டரி அதிபர் மகன் கலாய்

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இணைந்த லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின் நேற்றிரவு திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சி துவங்கினால் சரியான கூட்டணிக்கு சென்றால்தான் ஜெயிக்க முடியும்.

ஓட்டு வங்கியை உயர்த்தி, வலிமையை காட்டுவேன் என்பதற்கு இது படம் அல்ல. உண்மையான அரசியல். கட்சிப்பணத்தையும், மக்கள் பணத்தையும் செலவு பண்ணி, ஜெயிக்க வேண்டும், பதவியை பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வருவது வழக்கம். ஆனால், தவெக ஓட்டை பிரித்து கணக்கு காட்டுவதற்காக வந்துள்ளதாக தெரிகிறது.

ஏதாவது ஒரு கூட்டணிக்கு தவெக வந்திருக்க வேண்டும். நடிகர் சிரஞ்சீவி ஒரு கட்சியை ஆரம்பித்து, மாஸாக காட்டி, கடைசியில் காங்கிரஸில் இணைந்த சூழல் நடந்ததே தவிர, பெரிய சக்தியாக மாற்ற முடியவில்லை. விஜய்யுடன் இருப்பவர்கள் அவரை சரியான பாதையில் அழைத்து செல்லவில்லை. அவர்கள் யாருடனும் கூட்டணிக்கு செல்ல விடமாட்டார்கள். இவ்வாறு கூறினார்.

Related Stories: