சென்னை: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது. இந்த தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், ல.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளிலும், பாஜகவுக்கு 10 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் லஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். உப்பளம் தொகுதியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் ஏ.அன்பழகன் மற்றும் உருளையன்பேட்டையில் புதுச்சேரி மாநில முன்னாள் துணைச் செயலாளர் ஏ.காந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
