கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகையில் ரூ.119 கோடியில் 3 டைடல் நியோ பூங்கா

சென்னை: கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகையில் ரூ.119.06 கோடியில் புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்டம், இனாம் கரூரில் ரூ.38.50 கோடியில் தரை மற்றும் 4 தளங்களுடன் 64,000 சதுர அடி கொண்டதாகவும், புதுக்கோட்டை மாவட்டம், நத்தம்பண்ணை கிராமத்தில் ரூ.36.78 கோடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 60,400 சதுர அடி கொண்டதாகவும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகரத்தில் ரூ.43.78 கோடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 61,000 சதுர அடி கொண்டதாகவும் 3 புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இப்பூங்காக்கள் ஒவ்வொன்றும் சுமார் 600 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மினி டைடல் பூங்காக்களின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வசித்துவரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன் அப்பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவிடும்.

நிகழ்ச்சியில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ், தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் நியோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: