சென்னை: எரிசக்தி துறை மேம்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு – கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் / கல்வி திட்டமிடல் மற்றும் சர்வதேச அலுவலர் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.கலிபோர்னியா பல்கலைக்கழகம், உலகளவில் எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வுகளில் முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்கிறது. பசுமை எரிசக்தி தொழில்நுட்பம், மின்சார சந்தை அமைப்பு, எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் காலநிலை கொள்கைகள் போன்ற துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார துறையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் மின்தேவையை குறைந்த செலவில் வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பிற்கு திட்டமிடல், புதுபிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு, மின்கட்டமைப்புக்கு ஏற்ப மின்சார சேமிப்பு அமைப்புகள் மற்றும் மேம்பாடு, மின்சார சந்தை வடிவமைப்பு மற்றும் ஒழுங்குமுறை கொள்கை, மின்தொடரமைப்பு மற்றும் கட்டமைப்பை நவீனமயமாக்கல், காலநிலைக்கேற்ப நெகிழ்வு தன்மையுடன் கூடிய மின்சார அமைப்பு, தமிழ்நாடு மின்சார துறையில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
