சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 50 கம்பெனி துணை ராணுவம் மார்ச் 10ம்தேதி தமிழகம் வருகை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மார்ச் 10ம் தேதி 50 கம்பெனி துணை ராணுவப் படை தமிழகம் வருகிறது. தமிழகத்தில் தற்போதைய ஆட்சி மே இறுதியுடன் முடிவடைய உள்ளதால் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படலாம். தேர்தலையொட்டி தலைமை தேர்தல் அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து முக்கிய கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து தமிழக தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அனைத்து ஆயத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீவிர செய்து வருகிறது.

இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டாக 50 கம்பெனி துணை ராணுவம் வரும் மார்ச் 10ம் தேதி தமிழகம் வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றுதான் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. தேர்தல் தேதி மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் மார்ச் 10ம் தேதி தமிழகத்திற்கு 50 கம்பெனி துணை ராணுவம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

Related Stories: